குறள்-42

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

மு.வ உரை

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

கலைஞர் உரை

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

Transliteration

Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum
Ilvaazhvaan Enpaan Thunai

Couplet

To anchorites, to indigent, to those who’ve passed away,
The man for household virtue famed is needful held and stay.

Explanation in English

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

குறள்-41

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

மு.வ உரை

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

கலைஞர் உரை

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

Transliteration

Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum
Nallaatrin Nindra Thunai

Couplet

The men of household virtue, firm in way of good, sustain
The other orders three that rule professed maintain.

Explanation in English

He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in.

குறள்-40

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

மு.வ உரை

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

கலைஞர் உரை

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

Transliteration

Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi

Couplet

‘Virtue’ sums the things that should be done;
‘Vice’ sums the things that man should shun.

Explanation in English

That is virtue which each ought to do, and that is vice which each should shun.

குறள்-39

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

மு.வ உரை

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

சாலமன் பாப்பையா உரை

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

கலைஞர் உரை

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

Transliteration

Araththaan Varuvadhe Inpam Mar Rellaam
Puraththa Pukazhum Ila

Couplet

What from virtue floweth, yieldeth dear delight;
All else extern, is void of glory’s light.

Explanation in English

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

குறள்-38

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

மு.வ உரை

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

கலைஞர் உரை

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

Transliteration

Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan
Vaazhnaal Vazhiyataikkum Kal

Couplet

If no day passing idly, good to do each day you toil,
A stone it will be to block the way of future days of moil.

Explanation in English

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

குறள்-37

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

மு.வ உரை

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

சாலமன் பாப்பையா உரை

அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

கலைஞர் உரை

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

Transliteration

Araththaaru Ithuvena Ventaa Sivikai
Poruththaanotu Oorndhaan Itai

Couplet

Needs not in words to dwell on virtue’s fruits: compare
The man in litter borne with them that toiling bear.

Explanation in English

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

குறள்-36

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

மு.வ உரை

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை

முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

கலைஞர் உரை

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

Transliteration

Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu
Pondrungaal Pondraath Thunai

Couplet

Do deeds of virtue now Say not, ‘To-morrow we’ll be wise’;
Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Explanation in English

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

குறள்-35

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

மு.வ உரை

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

கலைஞர் உரை

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

Transliteration

Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram

Couplet

‘Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

Explanation in English

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

குறள்-34

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

மு.வ உரை

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

கலைஞர் உரை

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

Transliteration

Manaththukkan Maasilan Aadhal Anaiththu Aran
Aakula Neera Pira

Couplet

Spotless be thou in mind! This only merits virtue’s name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.

Explanation in English

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

குறள்-33

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

மு.வ உரை

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

கலைஞர் உரை

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

Transliteration

Ollum Vakaiyaan Aravinai Ovaadhe
Sellumvaai Ellaanj Cheyal

Couplet

To finish virtue’s work with ceaseless effort strive,
What way thou may’st, where’er thou see’st the work may thrive.

Explanation in English

As much as possible, in every way, incessantly practice virtue.